புதன், 13 ஜூன், 2012

வீட்டுத்தோட்டம்

இப்படித்தான் தோட்டம் போடணும்...




வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக ரஞ்சிதஜாய் தந்த சிறப்பு ஆலோசனைகள் இதோ...



'தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதில்லை. பழைய சாக்குகளிலும் வளர்க்கலாம். சாக்கின் அடிப் பகுதியில் ஒரு அடுக்கு கதம்பையைப் (தேங்காய் மட்டை) போட்டு, அதன் மேல் மட்கிய இலை தழைகளை ஒரு அடுக்குப் போட வேண்டும். மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்தக் கலவையை இட்டு... ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம்பிண்ணாக்கு, அதே அளவு எலும்புத்தூள், கொஞ்சம் சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றை இட வேண்டும். பிறகு நமக்கு விருப்பமான செடிகளை நடவு செய்யலாம். கதம்பை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்



அதிகளவில் கேந்திப்பூச்செடியை வளர்ப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம். தவிர, துளசி, புதினா, வசம்பு, செவ்வந்தி... போன்ற செடிகளும் பூச்சிகளின் வரவைத் தடுக்கின்றன. வசம்பின் வாசம் இருந்தால்... அந்தப் பக்கமே பாம்பு தலை வைக்காது.



தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகள் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை, சிறிது பச்சை சாணம், சிறிது கடலைப் பிண்ணாக்கு, சிறிது வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். காய்ந்த இலை தழைகளை செடிகளில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். முட்டைக் கூடு, வெங்காயத் தொழி... என்று சமையலறைக் கழிவுகளையும் செடிகளுக்கு உரமாக இடலாம். தேவைப்பட்டால், வேப்பெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சோப்புக்கரைசலில் கலந்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.