ஞாயிறு, 13 அக்டோபர், 2013

புதன், 10 ஜூலை, 2013

ரமதான் மாதமே வருக !

புனிதமிகு இரமதான் மாதத்தை அடைந்துவிட்டோம்.இது இறைவனின் பெரும் கருணையாகும்.இம்மாதத்தின் மாண்பு என்னவென்றால் இஸ்லாமியத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான 'ஜக்காத்' எனப்படும் மார்க்க வரியை, அதைப்பெற தகுதியான மக்களிடம் முறையாக தருவதற்கு ஏற்ப்புடைய காலம்.அதற்க்கான மனநிலையைப்பக்குவப்படுத்தும் 'நோன்பு' கடைபிடிப்பதும், பசியின் தாகம் மற்றும் பசி தீர்க்க வல்ல இறைவனின் கிருபைகளுக்கு நன்றி தெரிவிக்க மற்றும் போற்றுதலுக்குரிய இறைவனை அதிகதிகமாக நினைந்துருகவும் ஏற்ற தருணம்.உள்ளத்தூய்மை,மனக்கட்டுப்பாடு ஆகியவற்றை பரிட்சித்துப் பார்க்க ,நிரந்தரமாக நடைமுறைப்படுத்த ஏற்ற மாதம்.

புதன், 13 ஜூன், 2012

வீட்டுத்தோட்டம்

இப்படித்தான் தோட்டம் போடணும்...




வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக ரஞ்சிதஜாய் தந்த சிறப்பு ஆலோசனைகள் இதோ...



'தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதில்லை. பழைய சாக்குகளிலும் வளர்க்கலாம். சாக்கின் அடிப் பகுதியில் ஒரு அடுக்கு கதம்பையைப் (தேங்காய் மட்டை) போட்டு, அதன் மேல் மட்கிய இலை தழைகளை ஒரு அடுக்குப் போட வேண்டும். மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்தக் கலவையை இட்டு... ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம்பிண்ணாக்கு, அதே அளவு எலும்புத்தூள், கொஞ்சம் சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றை இட வேண்டும். பிறகு நமக்கு விருப்பமான செடிகளை நடவு செய்யலாம். கதம்பை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்



அதிகளவில் கேந்திப்பூச்செடியை வளர்ப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம். தவிர, துளசி, புதினா, வசம்பு, செவ்வந்தி... போன்ற செடிகளும் பூச்சிகளின் வரவைத் தடுக்கின்றன. வசம்பின் வாசம் இருந்தால்... அந்தப் பக்கமே பாம்பு தலை வைக்காது.



தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகள் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை, சிறிது பச்சை சாணம், சிறிது கடலைப் பிண்ணாக்கு, சிறிது வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். காய்ந்த இலை தழைகளை செடிகளில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். முட்டைக் கூடு, வெங்காயத் தொழி... என்று சமையலறைக் கழிவுகளையும் செடிகளுக்கு உரமாக இடலாம். தேவைப்பட்டால், வேப்பெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சோப்புக்கரைசலில் கலந்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.






சனி, 10 செப்டம்பர், 2011

குவைத் நினைவுகள்



முதல் அயல் நாட்டு பணிவாய்ப்பு.ஏப்ரல் 2001 முதல் ஏப்ரல் ௨00௭ வரை.

வாய்ப்பு சிலசமயம் தேர்ந்தெடுக்கப்படுவது,பெருவாரியாக அமைவது.பல கசப்பான அனுபவங்களையும், பொருளாதார ரீதியாக ,மற்றும் மனித உணர்வுகளைப்புரிந்துகொள்ள , வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான நிறைய ரகசியங்களை எடுத்துச்செல்லும் காலச்சுவடுகளுடன் எங்கள் வாழ்க்கைக்கான புரிதல்களின் அறிமுகமாக ஒரு புதிய உயிரை இந்த உலகுக்கு பரஸ்பரம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு பெற்ற இனிய தருணங்கள். இறைவனுக்கு நன்றி.

வியாழன், 9 செப்டம்பர், 2010

அனாமிகாக்கள்..!

தற்செயலாக பொதிகை அலைவரிசையில் ஒரு ஆவணப்படம் பார்த்தேன்.தொட்டில் குழந்தை திட்டம் பற்றியது. ஒரு தம்பதி தங்கள் குழந்தையை 'சேர்க்க' காப்பாளரிடம் இசைவு உறுதிப்படுத்தும் காட்சிகள்.
கணவர் கல் நெஞ்சோடு உறுதியாகப்பேச, தாய் உள்ளமோ தவிக்க... நெஞ்சைப்பிசையும் சம்பவம் அது.
இந்தக்குழந்தை வளர்ந்து ஆளானதும் சந்திக்கபோகும் பிரச்சினைகள் ஏராளம்.
எனது நண்பர் ஒருவர் சமூக ஆர்வலர், சில பிரபலங்கள் ஆதரவுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை சென்னையில் பராமரிக்கும் பொறுப்பிலிருந்தார்.நானும் ஓரிருமுறை அந்த பிள்ளைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.பொருளுதவி செய்ய நிறைய நல்லுள்ளங்கள் இசைந்திருக்கின்றனர்.இதையெல்லாம் விட தங்கள் மீதும் அன்பு செலுத்த ஆள் இருக்கின்றனர் என்கிற உயிர்த்துடிப்பு அந்தக்கண்களில் இருப்பதை ,அவர்களை நேரில் சந்திக்கும்போது உணர்ந்தேன்.
காலப்போக்கில் நண்பர் அப்பொறுப்பிலிருந்து கனத்த மனதோடு விலகிவிட்டார் என அறிந்தேன்.விசாரித்தபோது பெண் பிள்ளைகள் வளர்ந்து பருவ வயதை அடையும் தருணங்களில் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை, அவர்களைக்கட்டுப்படுத்தி வைப்பதில் உள்ள சிரமங்களை விவரித்தார்.
தொட்டில் குழந்தை திட்டம் துவக்கிய அரசியல் தலைவர்கள், தற்சமயம் அத்திட்டம் குறித்தெல்லாம் யோசிக்க நேரமோ,வாய்ப்போ இல்லை.இந்தக்குழந்தைகளின் எதிர்காலம் இறையருளால் சரியாக அமையவேண்டும்.
ஜெயகாந்தனின் 'நிக்கி' என்ற சிறுகதை நினைவில் வந்தது.(கதையில் வரும் கதாபாத்திரத்தோடு ஒப்பிடவில்லை, கதையின் கரு மட்டும் எண்ணிப்பாருங்கள்.)

சனி, 28 ஆகஸ்ட், 2010

It's a breaking news...!

தமிழ் வார இதழ்களில் முதன்மை வரிசையிலுள்ள நிறுவனம் வெளியிடும் வாரமிருமுறை வெளியாகும் இதழ், 'கிரைம்' என்ற தலைப்பின் கீழ் வழமையாக சுவாரஸ்யமான செய்திகளை பதிவு செய்கிறது.
கொஞ்சம் சிந்தித்துபார்த்தால்நாம் காட்டும் 'அறிந்துகொள்ளும் ஆர்வத்தை'( curiosity)எவ்வளவு மட்ட ரகமாக உத்தேசித்து,ஊடகத்துறை வியாபாரம் செய்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.பெரும்பாலும் பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகள், மட்டரகமான மூன்றாம் தர சிந்தனைகளைத்தூண்டும் வகையில் செய்தித்தொகுப்புகள் அதிகம் இடம் பெறுகின்றன.. (உதாரணம் : திருச்சியில் சில குடும்பப்பெண்கள் விபசாரத்திற்கு இசைவது, தரகர் உரையாடல் வடிவில்) .இதற்கு உள்ளூர் சமுக சேவகர் ஒருவரை சாட்சிக்கு வைத்துக்கொள்வது அநியாயம்.
இந்த நிறுவனம் இணைய சந்தாதாரர்களை அதிகம் கொண்டது.
"It's a breaking news" என்ற இந்திப்படம் பார்த்தபோது இந்த நிதர்சனம் உரைத்தது. வாசகனுக்கு விழிப்புணர்வு கூடுதலாக தேவை.இல்லையேல் நம்மையறியாமல் இந்த இந்த மாதிரி வக்கிர ரசனைக்கு அடிமையாகும் அபாயம் இருக்கிறது.

திங்கள், 1 மார்ச், 2010

கேள்வி-பதில்

ஒரு கம்பெனியின் லாபம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது. ஆனால் போனஸ் பங்குகள் அளித்ததால் இ.பி.எஸ். குறைந்திருக்கிறது. லாபம் அதிகரித்ததை வைத்து அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கலாமா? அல்லது இ.பி.எஸ். குறைந்ததால் அதை வாங்காமல் விட்டுவிடலாமா?

- ரகோத்தமன், சென்னை.

எம்.சேகர், டைரக்டர், தோஹா புரோக்கரேஜ் அண்ட் ஃபைனான்ஸியல் சர்வீசஸ்.

''ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்குவதால்தான் அதன் முதலீட் டாளர்களுக்கு ஊக்கத்தொகையாக போனஸ் பங்குகளை வழங்குகிறது. போனஸ் பங்குகளைக் கொடுப்பதால் அதன் பங்கு மூலதனம் அதிகரிக்கவே செய்யும். அப்போது இ.பி.எஸ். குறையவே செய்யும். இ.பி.எஸ். குறைந்துவிட்டது என்பதை மட்டும் வைத்து ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, வருமானம், நிறுவனத்துக்கு வரும் ஆர்டர்களை வைத்து பங்கை வாங்கவோ, விற்கவோ செய்யலாம்.



ஒருவரின் ஆண்டு வருமானத்துக்கு பத்து மடங்குக்கு ஈடாக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அஞ்சல் துறையில் உள்ள போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் மூலம் ஒருவர் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே ஆயுள் காப்பீடு எடுக்கமுடியும். போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் பிற இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்- இவற்றில் எது சிறந்தது ?

- எஸ்.சுந்தரலிங்கம், ஈரோடு.

ஹரிஹரன், நெஸ்டோ குரூப் ஆஃப் கம்பெனிஸ்.

''அஞ்சல் துறை, போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸை ஆரம்பித்தது கிராமப்புற மக்களும் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதனால் அதில் குறைவான தொகைக்கு மட்டுமே ஆயுள் காப்பீடு எடுக்கமுடியும். பிற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பல வகையான பாலிசிகள், ஃபண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. எனவே உங்களுக்கு எது சிறந்தது என்று ஆராய்ந்து தேவைக்குத் தகுந்தாற்போல் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தேவை மூன்று லட்சத்துக்குள் எனில் அஞ்சல் துறையே போதுமானது. அதற்கு மேலும் வேண்டுமென்றால் மற்றவற்றை நாடவும். மேலும் வருமானத்தைப் போல் பத்து மடங்கு அளவு பாலிசி எடுக்கும்போது டேர்ம் பாலிசிதான் சிறந்தது.



எனது திருமணத்தின்போது என் அம்மா எனக்கு சீதனமாக கொடுத்த பரம்பரை நகை உள்ளது. அதனை விற்க நேர்ந்தால் மூலதன ஆதாய வரி கட்டவேண்டுமா?

- அனிதா, மார்த்தாண்டம்.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் சவுத்ரி அண்ட் அசோசியேட்ஸ்.

''பரம்பரை நகை நீண்டகால உடைமையா, குறுகியகால உடைமையா என்று பார்க்கவேண்டும். நீங்கள் அந்த நகையை 36 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் அது நீண்டகால உடைமை. எனவே அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக இன்டெக்ஸேஷனுக்குப் பிறகு 20 சதவிகிதம் கட்டவேண்டும். 36 மாதங்களுக்கு குறைவாக நீங்கள் அதை வைத்திருந்தால் குறுகியகால மூலதன ஆதாய வரியாக உங்களது அடிப்படை வருமானவரி வரம்புப்படி வரி கட்டவேண்டும். அப்படியில்லையென்றால் மத்திய அரசு இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. நேஷனல் ஹய்வேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ரூரல் எலெக்டிரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் இந்த இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகையை விற்ற பணத்தை டெபாஸிட் செய்து மூன்று வருடங்களுக்கு எடுக்காமல் இருக்கவேண்டும். போட்ட பணத்துக்கு வட்டியும் தரப்படுகிறது. இவ்வாறு செய்யும்பட்சத்தில் நகையை விற்றதற்கு வரி கட்ட வேண்டியது இருக்காது''



மத்திய அரசு ஊழியராகிய நான், எனது மாமியார் பெயரில் உள்ள சொத்தை அடமானம் வைத்து ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் வீட்டுக்கடன் இருவர் பெயரிலும் வாங்கினேன். அந்தக் கடனை வேறு ஒரு வங்கிக்கு என் பெயரில் டேக் ஓவர் செய்ய நினைக்கிறேன். இது சாத்தியமா? மாற்றமுடியுமா?

- பழனிசாமி, பாலக்காடு.

''ரத்த சொந்தங்களுக்கு இடையே உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து கடன் வாங்கியிருந்தால் மட்டுமே அப்படி கடனை டேக் ஓவர் செய்யமுடியும். உதாரணத்துக்கு உங்களது மாமியாரும் உங்கள் மனைவியும் சேர்ந்து கடன் வாங்கியிருந்தால் உங்களது மனைவி பெயருக்கு அந்தக் கடனை டேக் ஓவர் செய்யமுடியும். ஏனென்றால் அவர்கள் இருவரும் ரத்தசொந்தங்கள். எனவே உங்கள் பெயரில் இருக்கும் வீட்டுக்கடனை வேறு ஒரு வங்கிக்கு டேக் ஓவர் செய்யமுடியாது.



வீட்டுவசதி வாரிய வீட்டின் பத்திரத்தை வைத்து தனிநபர் கடன் வாங்கலாமா?

- ஆர்.ஈஸ்வரி, கோயம்புத்தூர்.

''வீட்டுவசதி வாரிய வீட்டின் பத்திரத்தை வைத்து வீட்டு அடமானக் கடன் மட்டுமே வாங்கமுடியும். இதற்கு குறைந்தபட்சமாக பிடித்தம்போக 12 ஆயிரம் ரூபாயாவது நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருக்கவேண்டும். கடனாக வாங்கும் பணத்தை ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்பக் கட்டவேண்டும். வீட்டுவசதி வாரிய வீட்டின் பத்திரத்தை வைத்து தனிநபர் கடன் வாங்க முடியாது. பொதுவாக தனிநபர் கடனுக்கு சொத்து அடமானம் கேட்பதில்லை. வருமானச் சான்றிதழ் கேட்பார்கள். வட்டியும் அதிகம்.




நான் ஜவுளித் துறையில் இருக்கிறேன். புதிதாக இன்னொரு யூனிட் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். புது யூனிட்டில் பெண்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதால், அரசாங்கத்திடம் ஏதாவது அனுமதி வாங்க வேண்டுமா? எந்தெந்த விஷயத்தில் நான் கவனமாக இருக்கவேண்டும்?

சசி, கரூர்.

தனபால், வழக்கறிஞர்.

''தொழிலாளர் சட்டத்தில் ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லை. உங்கள் யூனிட்டில் முழுவதுமாக ஆண்கள் இருக்கலாம் அல்லது பெண்களும் இருக்கலாம். மற்ற இடங்களில் பெண்களுக்கு என்னென்ன சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகின்றதோ, அதை முழுமையாக வழங்கினால் போதும். என்றாலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. பெண்களுக்கு இரவுப் பணி கொடுக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், நீங்கள் வேலைக்கு எடுக்கும் பெண்கள் அதற்குத் தயாராக இருப்பார்களா என்று முன்பே தெரிந்துகொள்வது நல்லது. வேலைக்கு எடுத்தபிறகு, அது அவர்களுக்கு சௌகரியப்படவில்லை என்று ராஜினாமா செய்தால் உங்கள் யூனிட் உற்பத்தி பாதிப்படையும். எனவே கவனம் தேவை!

தவிர, ஆண்களால் மட்டுமே செய்ய முடிகின்ற வேலையை பெண்களுக்குக் கொடுக்கமுடியாது. அதேபோல கடுமையான வேலையைச் செய்யும்படி பெண்களைக் கட்டாயப்படுத்தவும் கூடாது. 14 முதல் 18 வயது வரையிலுள்ள ஆண்கள் செய்யக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட எந்த வேலையையும் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது.

பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் அவர்களின் குழந்தைகளையும் அழைத்துவர வாய்ப்புண்டு. எனவே குழந்தைகள் காப்பகம் (creech) இருக்கவேண்டும். பெண்களுக்கு பிரசவகால விடுமுறைகள் கொடுத்தாகவேண்டும். யூனிட்டின் உற்பத்தி பாதிக்காமல் இந்த வசதிகளை எல்லாம் செய்து கொடுக்கமுடியும் என்றால் பெண்கள் மட்டுமே வேலை செய்யும் யூனிட்டை நீங்கள் தாராளமாக நடத்தலாம்.''



நான் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறேன். ஓரளவுக்கு பெரிய கடைதான். இப்போது இருக்கும் இடம் போதாது. கடையை இன்னும் பெரிதாக்கவேண்டும் என்று நான் யோசிக்கும் வேளையில், கடையை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லிவிட்டார் இடத்தின் உரிமையாளர். பக்கத்தில் இடம் தேடியபோது நல்ல, பெரிய இடமாக கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் கிடைத்தது. அங்கு கடையைக் கொண்டு போனால் இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. என்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும்?

செந்தில், திருச்செங்கோடு.

ஆர்.வி.ராஜன். ரூரல் மார்க்கெட்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா.

''நீங்கள் வாடிக்கையாளர்களோடு எப்படிப்பட்ட உறவை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களோடு இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் ஒரு போன் செய்தால் போதும்; அவர்களின் வீட்டுக்கே அத்தனை பொருள்களையும் அனுப்பிவிடும் கச்சிதமான கடைக்காரர் நீங்கள் என்றால் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தரமான பொருட்களை சிரித்த முகத்தோடு கொடுக்கும் கடைக்காரர்கள் எனில் இரண்டு சந்து தள்ளி கடை வைத்தாலும் தேடி வரத்தான் செய்வார்கள்.

என்றாலும்கூட, தகவல்தொடர்பு (communication) சம்பந்தமான சில விஷயங்களை நீங்கள் செய்யத்தான் வேண்டும். நீங்கள் எந்த இடத்துக்கு உங்கள் கடையை மாற்றி இருக்கிறீர்கள் என்பதை வாடிக்கையாளர்களிடம் சொல்லாமல் யாரும் உங்களைத் தேடி வரமாட்டார்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றப் போகிறீர்கள் என்கிற முடிவை எடுத்தவுடன் அது பற்றி உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியம். தவிர, கடையை காலி செய்தபிறகும் இந்தக் கடை இப்போது இந்த விலாசத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை ஒரு பலகையில் எழுதி வைப்பது அவசியம்.

கடை மாற்றம் குறித்து நீங்கள் இழக்க விரும்பாத ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டுக்கும் கடிதம் எழுதியோ, போன் மூலமாகவோ சொல்வது நல்லது. நேரில் பார்க்கும்போது அதை நயமாக எடுத்துச் சொல்லலாம். புதிய இடத்தில் கடையை மாற்றியபிறகு விளம்பரத்துக்காகக் கொஞ்சம் செலவழிப்பது அவசியம். எனக்குத் தெரிந்து நிறைய கடைகள் இடத்தை மாற்றியபிறகும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்ததால்தான் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கிறார்கள்.

நீங்கள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சில வாடிக்கையாளர்களை இழப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அவர்களுக்குப் பதிலாக புதிய வாடிக்கையாளர்கள் சிலர் கிடைக்கலாம். கவலை வேண்டாம்






மீபகாலத்தில் எந்தப் பொருளின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தால், அந்தப் பட்டியலில் உள்ள முதல் பத்து பொருட்களில் ஒன்றாக நிச்சயம் தெர்மாகோல் இருக்கும். வீட்டுக்குத் தேவைப்படும் கண்ணாடிப் பொருட்களா? இல்லை, டிவி.யா? அல்லது ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின் மாதிரியான எலெக்ட்ரானிக் அயிட்டமா? அத்தனை பொருட்களையும் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது தெர்மாகோல். கட்டடங்களுக்கு 'ஃபால்ஸ் சீலிங்' அமைக்கவும் இந்த தெர்மாகோலைத்தான் பயன்படுத்துகிறார்கள். பால் வெண்மையாய் இருக்கும் இந்த தெர்மாகோலைத் தயாரிப்பது மிகவும் சுலபம்.

முதலீடு

குறைந்தபட்சம் 15 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை.

ஆள்பலம்

15 பேர்.

மூலப் பொருட்கள்

பெட்ரோலியப் பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்.

இயந்திரங்கள்

பாய்லர், ப்ரீ ஃபாமர், ஸ்டீமர், கம்ப்ரசர், கட்டிங் மெஷின் போன்ற இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. பாய்லர் ஒன்றின் விலை சுமார் ரூ.4 லட்சம், ப்ரீ ஃபாமர் 2 லட்சம் ரூபாய், கம்ப்ரசர் 1.5 லட்சம் ரூபாய், கட்டிங் மெஷின் 70 முதல் 80 ஆயிரம் ரூபாய்.

இயந்திரங்கள் கிடைக்கும் இடம்

இந்தியாவில் மும்பையில் இத்தொழிலுக்கான எல்லா வகை இயந்திரங்களும் கிடைக்கின்றன.

செய்யும் முறை

மூலப்பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்கின் விலை ஒரு கிலோ 93 ரூபாய் ஆகிறது. அதனைக் கொண்டு 900 கிராம் கிரான்யூல்ஸ் எனப்படும் தெர்மாகோல் உருண்டைகளைத் தயாரிக்கலாம். மூலப்பொருளை முதலில் பாய்லரில் போட்டு சூடாக்குகிறார்கள்.

அது வெந்தபிறகு சிறு உருண்டைகளாக வெளியே வருகிறது. அதனை பாலிமர், ஸ்டீமர், கம்ப்ரஸர் என அடுத்தடுத்த மெஷின்களில் போட்டு இன்னும் பெரிதான உருண்டையாக மாற்றுகிறார்கள். இந்த தெர்மாகோல் உருண்டைகளைத்தான் கிரான்யூல்ஸ் என்று சொல்கிறார்கள். இதனை ஷீட்டாகவோ அல்லது மோல்டிங் செய்து நமக்குத் தேவையான வடிவத்துக்கோ மாற்றிக் கொள்ளலாம்.

வாகனம்

உள்ளூரில் டெலிவரி செய்ய வாகனங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களை சுலபமாக சென்றடையலாம்.

இடம்

தெர்மாகோல் தயாரிப்பு யூனிட் ஆரம்பிக்க சுமார் 25 சென்ட் இடம் தேவை.

ரிஸ்க்

நெருப்புதான் இந்த தொழிலின் முதல் எதிரி. பஞ்சு போன்று இருப்பதால் தெர்மாகோல் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். எனவே நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டும்.

இன்ஷூரன்ஸ்

தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதற்கான இன்ஷூரன்ஸ் அவசியம் வேண்டும்.

மார்க்கெட்

இந்த பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் குறைவு. ஆனால் இதற்கான மார்க்கெட் அதிகளவில் உள்ளது.

லாபம்

சுமார் 40 சதவிகிதம் அளவுக்கு லாபம் பார்க்கலாம்.

எக்ஸ்ட்ரா வாய்ப்பு

இதன் வேஸ்டேஜ்களை மீண்டும் ரீசைக்ளிங் செய்து பயன்படுத்தலாம்.