வியாழன், 4 ஜூன், 2009

படிக்க...சிந்திக்க...!

நன்றி : திரு.ஹரிதரன் சோமசுந்தரம்.(முன்னாள் ஸ்பிக் ஊழியர் இணையக்குழுமம்)

பணம் தேடிச் செல்லும் பாய்மரங்கள் -வளைகுடா வாழ் தமிழர்கள் பற்றிய குறிப்புகள்

'இரத்தம் தண்ணீரைவிடக் கனமானது, ஆனால் எண்ணையோ இவை இரண்டையும் விட கனமானது' என்றார் வளைகுடா பற்றி மார்க்சிய அறிஞரான பெர்ரி ஆண்டர்ஸன். பணம் இவை எல்லாவற்றையும்விட கணமானது என்ற நிதர்சனத்தை கூறுவதே இங்கு வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் நிலை என்றால் மிகையாகாது. திரைக்கடல் ஓடி திரவியம் தேட சொன்னவனுக்கு இப்பணத்தின் கனம் தெரிந்திருக்கிது. இக்கனத்தை சுமக்க வளைகுடாவிற்கு ஏகிய தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் பற்றியதான இக்குறிப்புகளினூடாக அவர்களது வாழ்நிலை மற்றும் அது இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தின்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிலவற்றை அவதானிக்க முயலலாம்.வளைகுடா என்பது சவுதி அரேபியா, குவைத், பஃஹ்ரைன், ஐக்கிய அரபுக் குடியரசு, கத்தர் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு புவி பரப்பாகும்। இந் நாடுகளுக்கிடையே உள்ள பாரசீக வளைகுடாவைக்கொண்டு இப்பெயர் வழங்கப்படுகிறது. 1960-ற்கு பின் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளம் இந் நாடுகளின் முகத்தையே மாற்;றி அமைத்தது. பொதுவாக பெட்ரோல் வளமிக்க நாடுகளாக இருப்பதுவே இந்நாடுகளின் பலமும் பலவீனமாகும். இந்நாடுகளை நோக்கி பிற நாட்டினர் தொழில்-ரீதியாகவும், வேலை வாய்ப்பிற்காக-வும் ஈர்க்கப்படுவதற்கும், அமேரிக்கா இந்நாடுகளை தொடர்ந்து போர்ப் பதற்றத்திற்குள் வைத்திருப்பதற்கும் இதுவே காரணம். உலகப் பொருளாதாரத்தை தீர்மாணிக்கும் நாடுகளாக இவை இருப்பதற்கு காரணமான இப்பொருளியல் வளமே, இந்நாடுகளின் அரசியலையும், அதிகார அமைப்பையும் தீர்மாணிப்பதாக உள்ளது. பாரம்பரிய அரசாட்சிமுறைகளே பெரும்பாலான வளைகுடா நாடுகளின் ஆட்சிமுறையாக இருக்கிறது। விலக்காக குவைத், கத்தார் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் ஆட்சி அமைப்பில் இருந்தபோதிலும், மன்னராட்சி என்பது பிரதானமானதாக உள்ளது. சென்ற ஆண்டு முதல் சவுதி அரேபியாவும் கூட வட்டார அதிகார குழக்களை உருவாக்க தேர்தல் முiறையை கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல் முறையில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதால் சவுதியின் முக்கிய நகரங்களில் ஆண்களும், பெண்களும் முதன்முறையாக அரசுக்கு எதிராக ஊர்வலம் போனார்கள். சவதியில் ஊர்வலம் போவதும் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஜனநாயகரீதியாக எடுத்துச் செல்லவும் முடியாத ஒரு அரசதிகார முறையே உள்ளது. இந்நாடுகளின் இத்தகைய ஆட்சிமுறையை மேற்கத்திய நாடுகள் பழமைவாதம் என்று விமர்சித்த போதிலும், இம் முறையை கட்டிக் காப்பதில் அவை தீவிரமாக இருக்கின்றன. உலகின் ஜனநாயக ஏற்றுமதியின் மொத்த வியபாரியாக தன்னை பாவித்துக் கொள்ளும் அமேரிக்கா இந்நாடுகளின் அரசாட்சியைக் கட்டிக்காப்பதற்காக தனது பாதகாப்புச்செலவில் கணிசமான தொகையை ஒதுக்குகிறது. காரணம் இந்நாடுகளின் எண்ணை வளத்தை சுரண்டுவதற்கு இத்தகைய அமைப்பே அவைகளுக்கு அவசியப்படுகின்றன. சவுதி அரேபியாவில் மட்டும் உலக எண்ணை வளத்தின் 25 சதவீதமும், ஓமனில் 10 சதவீதமும் உள்ளது. எண்ணை வளமற்ற துபாய் போன்ற நாடுகள் கட்டற்ற சர்வதேச சந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு தனது பொருளாதார வளத்தை ஈடுகட்டிக் கொள்கின்றன. சர்வதேச நிருவனங்களின் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான கடல் தளமாகவும் துபாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. துபாயின் இந்த வளர்ச்சியின் விளைவாக, வீடுகள், மணைகள் வாங்குவதற்கு அவ்வரசு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கி உள்ளது. வளைகுடா நாடுகளில் வெளிநாட்டினர் சொந்தமாக எந்த வியபாரமும் செய்யமுடியாது, துபாய் தவிர இதர நாடுகளில் சொத்தும் வாங்க முடியாது. இந்தியர்கள் உள்நாட்டினரின் பெயரிலேயே எந்த ஒரு தொழிலையும் செய்யமுடியும் என்பதால் இந்தியர்களின் முதலீடு என்பது ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் பெரும் அளவில் தொழில் தொடங்க முடியாத நிலை இருப்பதால் நட்சத்திர ஓட்டல்கள், தொழில் துறைகள், வியபார சந்தைகள் ஆகியவற்றில் பங்கீட்டாளர்களாக இருந்து கொண்டு வரும் வருமானத்தை இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், அதிகமான அந்நிய செலாவணியை இந்நாடுகளில் இருந்து இந்தியா பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.இந்நாடுகளின் போக்குவரத்து, தகவல் தொடர்பு வலைப்பின்னல், பொதுத்துறைக் கட்டிடங்கள் போன்ற அடிப்படைக்கட்டுமானத்தை உருவாக்கியது இந்திய குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலாளர்களே. இந்நாடுகளின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இவ்வடிப்படைக் கட்டுமானங்களுக்கு வெளிநாட்டினரையே நம்பி உள்ளன. இந்திய தொழிலாளிகள் குறைந்த கூலிக்கு கிடைப்பதால், பெருமளவில் இந்திய தொழிலாளர்கள் இங்கு பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்நாடுகளின் உருவாக்கத்தி;;ல் இந்தியர்களின் பங்கு பிரதானமானது.வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியாவின் மக்கள்தொகை 2005-ன் கணக்கின்படி 26 மில்லியன், அதாவது 2 கோடியே 60 லட்சம், தமிழகத்தின் மக்கள் தொகை 6-கோடி 2 லட்சத்துடன் (2001-ன் கணக்கின்படி) ஒப்பிட்டால் இது எவ்வளவு குறைவு என்பது புரியும்। சவுதி அரேபியாவின் பரப்பளவான 22 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருடன் தமிழக நிலப்பரப்பான 13 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டரை ஒப்பிட்டால், சவுதியின் பரந்த மக்கள் நெருக்கடியற்ற நிலையை புரிந்து கொள்ள முடியும். இதர வளைகுடாநாடுகளின் மொத்த மக்கள் தொகை 1 கோடிக்கும் குறைவானதே. இம்மனிதவளக் குறைவே வெளிநாட்டினரை பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடுகளாக இந்நாடுகளை உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றவர்களின் பற்றாக்குறையால், இந்நாடுகளில் பணிபுரியும் துறைசார்ந்த இந்திய வல்லுனர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் 70 சதவீதமும், அலுவலகப் பணியாளர்கள் 20 சதவீதம், தொழில்துறை சார்ந்த வல்லுனர்கள் 10 சதவீதமும் உள்ளனர். வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் இந்திய அயல் உறவுத்துறை கணக்கின்படி தோராயமாக 4 மில்லியன் (அதாவது 40 லட்சம்) ஆகும். அமேரிக்காவிற்கு பிறகு இந்தியாவுடன் மிகப்பெரிய தொழில் உறவு கொண்ட நாடுகள் இவை. இந்தியப் பொருள்களை இறக்கமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்நாடுகள் உள்ளன. இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் எண்ணை மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் இவையே. 2002-03-ல் இந்தியாவிற்கு வந்த அந்நிய செலவாணி இந்நாடுகளில் இருந்து மட்டும் 14.8 பில்லியன் டாலர் (தோராயமாக 74,000 கோடி இந்திய ரூபாய்களில்). இவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்கள் மற்றும் அரைத்தொழிலாளர்களால் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது. காரணம் தனியர்களாக உள்ள இவர்கள் வரும் வருமானம் அனைத்தையும் தாய்நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள் என்றபோதிலும், இத்தொழிலாளர்களின் நிலமை இந்நாடுகளில் மட்டுமின்றி தாய்நாட்டிலும் மோசமான நிலையிலேயே இருப்பது கண்கூடு.இங்கு பணி புரிபவர்களிடமிருந்து இந்திய அரசு பெறும் வருட அந்நிய செலவாணி 5 பில்லியன் டாலர்கள் (தோராயமாக 35,000 கோடி ரூபாய்கள்- றறற।வாநிநniளெரடயஙயவயச.உழஅ). இது மற்;ற ஐரொப்பிய, அமேரிக்க நாடுகளில் பண்புரிபவர்களின் வருமானத்தைவிட மிக அதிகமானதாக இருந்தபோதிலும் ஏனோ இந்திய அரசு வளைகுடாவில் பணிபுரியம் இந்தியர்களை பிறநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களைப்போல நடத்துவதில்லை என்று அக்டோபர் 10, 2003-ல் இந்திய பிரதமர் வாஜ்பேய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் Global Organization of People Indian Origin (GOPIO), INC டாக்டர் தாமஸ் அப்ரகாம். நிலமையும் அதுதான். பொதுவாக வளைகுடாவில் பணிபுரிபவர்கள் பற்றிய சமூக மதிப்பீடு என்பது ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிபவர்கள் மதிப்பீட்டைவிட குறைவாக இருப்பதையே காண்கிறோம். உண்மையில் இந்திய அரசுத்தரப்பிலும், வளைகுடா நாடுகளின் அரசுத்தரப்பிலும் பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையே வளைகுடாவில் வாழும் இந்தியர்களின் நித்hசனம். சர்வதேச விதிமுறைகளை எதுவும் பின்பற்றாத, மனித உரிமை மீறல்களையும் கொண்ட ஒரு பணியிடத்தையே இந்நாடுகளில் நாம் எதிர்கொள்கிறோம். வளைகுடா வாழ்க்கை என்பது உடல் உழைப்பாளர்களாக இருக்கும் தொழிலாளிகளுக்கு ஓர் மலர்படுக்கை அல்ல. ஒரு அறைக்குள் குறைந்தது 4 பேர்கள் தங்கும் சுகாதாரமற்ற இறுக்கமான வாழிடங்கள். 10-மணிநேர கடின உழைப்பு போன்ற பிரச்சனைகள் பொதுவாக இருப்பதை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கையும்.வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் பற்றிய இந்தியர்களின் பார்வையும்கூட மேற்கத்திய நாடுகள் அரேபிய சமூகங்கள்பற்றி கட்டமைத்துள்ள ஒரு பார்வையே நிலவுகிறது. அதாவது நாகரீகமற்ற, படிப்பறிவற்ற, முன்கோபம் கொண்ட முரட்டுத்தனமான கீழைத்தேயர்கள். இப்பார்வை மேற்கத்திய நாடு;களில் பணிபுரிபவர்-களுக்கு கீழ்நிலையான ஒரு மதிப்பீட்டை வளைகுடாவில் பணிபுரிபவர்களுக்கு வழங்குவதாகிறது.. இது 'மேற்கத்தியம்' தன்னை உருவாக்கிக்கொள்ள கடந்த சில நூற்றாண்டுகளாக உருவாக்கிய ஒரு அரசியல் பார்வையாகும். இப்பார்வைக்கு இந்தியர்களான நாமும் பலியாகியிருப்பதையே இது காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகள் ஒரு பண்புரீதியான மாற்றத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது, இங்கு நிற வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. வெளிநாட்டினர் உள்ளுர்காரர் என்கிற முரண்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுவதில்லை. மேற்கத்திய மற்றும் அமேரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வெள்ளைநிற வெறியால் ஒரு பதற்றத்திற்குள் வைக்கப்பட்டிருப்பதை ஒப்புநொக்கினால், வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் நிலை அத்தனை மோசமில்லை என்று உணரலாம்.பிரதானமாக இஸ்லாமிய மதத்தைக்கொண்டதாக இருந்தாலும் இந்நாடுகளில் பிற மதங்கள் மீது ஒரு நிருவனரீதியான வன்முறை என்பது இல்லை। பிற மதத்துவேஷம் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாடாக சில இடங்களில் வெளிப்பட்ட போதிலும் அது ஒரு பிரதானபோக்காக இல்லை। உண்மையில் இந்நாடுகள் இஸ்லாம் மதத்தை ஒரு ஆதிக்க கருத்தியலாக பின்பற்றகின்றனவே தவிர இந்தியர்கள் நினைப்பதைப்போல இஸ்லாமையோ அம்மதத்தினரையோ பாதுகாப்பது இவற்றின் நோக்கம் அல்ல. பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஆப்கான் பிரச்சனைகளில் இந்நாடுகள் குறைந்தபட்ச மனிதநேய நிலைப்பாட்டையோ அல்லது அந்நாடுகளில் கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் என்பதற்காகவேனும் குறைந்தபட்சம் மதரீதியான நிலைப்பாட்டையோ எடுக்கவில்லை என்பதும் இவற்றின் மத அபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்நாடுகள் தன்னை பாதுகாத்துக்கொள்ளக்கூட அமேரிக்காவின் உதவியை நாடும் சுயச்சார்பற்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன என்பது மற்றொமொரு அரசியல் உண்மை. இந்நாடுகள் தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கு சுயச்சார்புள்ள பாதுகாப்பிற்கான தொழிற்கூடங்களைக்கூட உருவாக்கிகொள்ளவில்லை என்பதே யதார்த்தம். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் இந்து மதத்தை சேர்ந்தவர்களிடையே ஆதாரமற்ற பதற்றமும், ஒரு அச்சமும் நிலவுகிறது। இவ்வச்சம் அடிப்படையற்றது என்றாலும் இது வாய்வழிக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்டதாகவே உள்ளது. இக்கதைகள் புழங்காத பொது இடங்களோ அறைகளோ குறைவு எனலாம். அதுபோன்றே இந்தியாவிலிருந்து வரும் இஸ்லாமியர்கிளிடையே ஒரு ஆதாரமற்ற பெருமிதமும் நிலவுவதை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் பெரும்பாண்மை மற்றும் சிறுபாண்மை அரசியல் கணக்கீடுகள் இந்நாட்டில் எதிர்மறையாக அமைந்திருப்பது மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கான நாடு என்கிற கருத்தாக்கம் தரும் பாதுகாப்பு எனலாம். இந்த மனமுரண் உருவாக்கும் இறுக்கம் அல்லது எதிர்-உணர்வானது இவர்களை மத அடிப்படைவாதிகாளாக மாற்ற முனைகிறது. வளைகுடாவிலிருந்து குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரும் இந்தியர்களிடையே இந்த மனநிலையின் தாக்கத்தை உணரமுடியும். இது இந்திய இந்து மற்றும் இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்துவிட ஏதுவாகிறது. வளைகுடாவில் வாழும் தமிழர்கள் பற்றியும் அவர்களால் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பாக அதாவது வளைகுடா தமிழர்கள் பற்றிய ஒரு தனிச்சிறப்பான சித்திரத்தை காட்டும் முகமான நிகழ்வுகளை தொகுக்க முடியாததற்கு இரண்டு காரணங்களைச் சுட்ட முடியும்। 1. அத்தகைய நிகழ்வுகள் பெருவாரியாக நடைபெறுவதில்லை. 2. அப்படி நடக்கக்கூடிய நிகழ்வுகளை தொகுப்பதறக்கான தரவுகள் மற்றும் தொடர்புகளும் அரிதாகவே காணப்படுகிறது. இங்கு இணையத் தரவுகள்வழிப் பெற்ற சில குறிப்புகள் இந்நாடுகளை அருகில் சென்று அறிந்து கொள்ள உதவும். இந்நாடுகளில் மிகப்பெரிய பரப்பையும், வளத்தையும் கொண்டது சவூதி அரேபியா। இங்கு மட்டும் பணிப்புரியும் இந்தியர்கள் எண்ணிக்கை 2001-ன் கணக்கின்படி 15 லட்சம். இது சவுதி மக்கள் தொகையில் 7 சதவீதம் ஆகும். தற்போது இது பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. வளைகுடா நாடுகளிலேயே மிக அதிகமான இந்தியர்களைக் கொண்ட நாடு இது. இந்தியாவிற்கு மட்டும் இந்நாட்டிலிருந்து வரும் வருட அந்நிய செலாவனி 4 பில்லியன் அமேரிக்கன் டாலர் (சுமார் 2,000 கோடி ரூபாய்). இது ஒரு தனிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் தொகைகளிலேயே அதிகபட்ச தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்பாட்டு நிகழ்வுகள், ஒருங்குகூடல், பண்டிகை கொண்டாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகள் பிற வளைகுடா நாடுகள் போல சவுதி அரேபியாவில் இல்லை என்பதும் மற்றொரு காரணம், சம்பாரிக்கும் பணத்தை அப்படியே இந்தியாவிற்கு அனுப்புவதற்கு. இஸ்லாம் தவிர்த்த எல்லா பொது நிகழ்வுகளும் தூதரக வளாகத்தில் நடைபெறு-வதைத்தவிர பிற பொது இடங்களில் நடைபெறுவதில்லை. இலக்கியமன்றங்களும், நிகழ்வுகளும் சாத்தியமற்ற நிலையில் இலக்கியம் சார்ந்த நபர்களை கண்டடைவதும் சாத்தியமற்ற நிலையே உள்ளது. தமிழர்களுக்கு என்று இலக்கிய சங்கங்கள் இருந்தபோதிலும் அதன் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் 50-வது பொன்விழா ஆண்டை, மற்ற மொழிச்சங்கங்கள் ஒரு விழாவாக கொண்டாடியபோது, தமிழர்கள் மட்டும் இரண்டு சங்கங்களாக இரண்டு விழாக்காளாக கொண்டாடிய தமிழின தேசிய ஓருமைப்பாட்டை என்னவென்று சொல்வது. சவுதி அரேபியா அரசதிகார அமைப்பும் மத அதிகார அமைப்பும் 3-விஷயங்களில் தனது கண்காணிப்பை குவிமையப்படுத்தியுள்ளது। 1. கம்யூணிஸம் 2. செக்ஸ்வாலிட்டி 3. பிறமத வழிபாடுகள். இவைகள் வெளிப்படையாக மறுக்கப்பட்டிருப்பதால் செக்ஸ்வாலிட்டி மற்றும் பிற மத வழிபாடுகள் மறைமுகமாக தனது இயக்கங்களை நிகழ்த்தி வருகின்றன எனலாம். இவ்வாறு 'வெளிப்படையான காமவெளி' மறுக்கப்பட்டிருப்பதால், ஒடுக்கப்பட்ட தனிமனிதனின் பாலியல் வேட்கைகைள் பதிலீடாகஇ நீலப்படங்கள் மற்றும் இந்திய சினிமாக்கள் பார்த்தல், பாலியல் குறித்த பேச்சுக்கள் என வெளிப்பாடு கொள்ள முனைகிறது. நீலப்படங்களின் சுற்றுவட்டம் ஒரு பெரும் வலைப் பின்னலைப் போல இயக்கம் கொள்கிறது. பாலியல் ஆற்றல்களை பல பாலியில் புனைவுகளை உருவாக்கி கதைப்பதன் மூலம் தணிக்க முயல்வதால், தனியர்களின் அறைகள் புனைவுகளால் திணறுவதைக் காணலாம். அரபிகள் பற்றியும், அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்களை தவறாக பயன்படுத்துவது முதல் அரபி பிள்ளைகள் உறவுகளுக்குள்ளேக்கூட உறவு வைத்துக் கொள்வது வரையில் இக்கதைகள் புனையப்பட்டு உலாவருவதுடன், தங்களது நாட்டில் நிகழ்ந்தாக தன்னை உள்ளடக்கிய புனைவுகளையும் திரித்து பேசி மகிழ்வது என்பது இவ்வகை காம நோய்க்கு நன்மருந்தாக இருக்கிறது எனலாம்.சவுதி அரேபியாவின் தண்டனை முறை குறித்தும் நிலவும் தப்பெண்ணங்களில் ஒன்று அதன் தலைவெட்டும் தண்டணை. இது கொலை, போதைப்பொருள் விற்பனை மற்றும் வன்பாலுறவு (கற்பழிப்பு) போன்றவற்றிற்கே அளிக்கப்படுகிறது. அதுவும் மிகக்குறிப்பான ஆய்வுகளுக்கு பின்பே. குற்றவாளி மனப்பூர்வமாக ஒப்புக்கொள்தல் அல்லது சரியான நேர்சாட்சிகள் மூலம் மட்டுமே தீக்மானிக்கப்படுகிறது. இறுதி தீர்ப்பு பாதிக்கப்பட்டவரின் முடிவிற்கு விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கொலையுண்டவனின் மணைவியோ அல்லது அவனது குடும்பத்தினரோ மன்னிப்பதன் மூலம் கொலையாளி விடுதலை செய்யப்பட்டு விடுகிறான். இது வெறும் மன்னிப்புடன் முடிந்துவிடாது, 'பிளட்-மணி' (ब्लड money) எனப்படும் அரசு நிர்ணயிக்கும் தொகையோ அல்லது கொலையுண்டவனின் மணைவி அல்லது குடும்பத்தினர் கேட்கும் தொகையோ கொலை செய்தவன் ஈடாக அளிக்க வேண்டும். அத்தொகை கொலையுண்டவனின் குடு;ம்பத்திற்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.மரணதண்டனை என்பது மனிதவிரோத செயல், அதற்கான உரிமை யாருக்கும் இல்லை என்பது ஓருபுறமிருக்க, அத்தண்டணையேக்கூட பிற ஜனநாயக நாடுகளில் நடைபெறுவதைப்போலத்தான் இங்கும் நடைபெறுகிறது। சிறைக்குள் நடத்தப்படும் தூக்குதண்டனை என்பதற்கு பதிலாக இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்றி தலைவெட்டுதல் என்பது ஒரு சடங்குச்செயல் போல் பொது இடங்களில் நடத்தப்படுகிறது. சுpறைச்சாலை என்கிற சமூக கண்காணிப்பு எந்திரத்தின் ஒரு திறந்தவெளிச் செயலே இது. பிற நாடுகளில் இது சிறைக்குள் நிகழ்த்தப்படுகிறது. ஒருமுறை சவுதி தலைநகரான ரியாத்தில் ஒரு தலை வெட்டு நிகழ்வை காண நேர்ந்தது। அதற்கு முன்புவரை, எனது கற்பனையில் தலைவெட்டு நிகழ்வுபற்றி பலரிடமும் கேட்டிருந்த கதைகளே இருந்தது. அதாவது ஒரு நபரை மனிதர்கள் கூடும் ஒரு இடத்தில் வைத்து தலையை ரத்தம் சொட்ட, சொட்ட வெட்டி தொங்க விடுவார்கள். அதனை பள்ளி செல்லும் குழந்தைகளை அழைத்து வந்து காட்டுவார்கள் என்பதாக. ஆணால், நான் பார்த்தது வேறு. ஒரு மைதானம், அது இரவுகளில் குழந்தைகளும் பல குடும்பங்களும் கூடும் ஒரு பூங்காவைப்போன்ற ஒன்று. பலமுறை அதே இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து இரவுகளில் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறேன் நான். அதன் அருகே ஒரு செயற்கை நீரூற்றும் உண்டு. இரவுகளில் வண்ண விளக்குகளுடன் அந்நீரூற்று நீரைத்தூவிக்கொண்டிருக்கும். அந்த இடம்தான் தலைவெட்டும் இடம் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். மைதானத்தில் பார்வையாளர்களான நாங்கள் நின்ற இடத்திற்கும் தலைவெட்டும் அம் மையத்திற்கும் இடையில் 100 அல்லது 150 மீட்டர் இடைவெளியிருக்கும். எங்களுக்கு முன்பாக ராணுவத்தினரின் ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கு நிகழ்பவை துல்லியமாக தெரியவில்லை. முகஅடையாளம் காணமுடியாத ஒரு இடைவெளி அது. அம்மைதானத்தின் மையத்தில் நீரூற்றுக்கு அருகே, ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது। மைதானத்திற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து ஒரு நபரை இறக்கினார்கள். அந்நபர் அரை மயக்கத்தில் இருந்தார். தள்ளாடிய அவரை இரு காவலர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்து அந்நாற்காலியில் அமர்த்தினர். அவரது முகம் கருப்புத் துணியால் மூடப்பட்டது. அவரது இரண்டு கைகளையும் தனித்தனியாக ஒரு கயிற்றால் கட்டி அக்கயிரை இரண்டு மருத்துவ உதவியாளர்கள் இழுத்துப்பிடித்துக் கொண்டனர். அவரது கால்களையும் அதேபோல் இரு கயிறகளால் கட்டி இருவர் பிடித்துக் கொண்டனர். அவரைச்சுற்றிலும் காவல் உயர் அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் நீதித்துறை அலுவலர்கள் என ஒரு 10 அல்லது 15 நபர்கள் நின்ற கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஒலிபெருக்கியில், தலைவெட்டப்படுபவரது குற்றம் மற்றும் அதற்கான தண்டனை ஆணை வாசிக்கப்பட்டது. பிறகு ஒருவர் கத்தியை அமர்ந்திருக்கும் அவரது கழுத்தின் மீது வைப்பதை பார்த்தோம். அடுத்த சில விணாடிகளில் அருகில் உள்ள ஆம்புலன்ஸ் அவரது உடலை தூக்கி வைத்துக் கொண்டு பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. மருத்தவ உதவியாளர்கள் அவ்விடத்தை சுத்தம் செய்யத்துவங்கினர். அடுத்த அரை மணிநேரத்தில் அங்கு சிறுவர்கள் சைக்கிள் விட்டுக் கொண்டும், கால்பந்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். நானும் அவ்வழியைக்கடந்து எனது வேலைக்காக அருகில் உள்ள 'பத்தா'- எனும் கடைவீதிக்குச் சென்றேன். 2001-ன் கணக்கின்படி 6-லட்சம் மக்கள்தொகையைக்கொண்ட பஃஹ்ரைனில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,30,000 ஆகும்। இது அந்நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். எண்ணை வளம் மட்டுமின்றி வளைகுடா நாடுகளின் மையப் பகுதியல் அமைந்திருப்-பதால் தகவல்தொடர்பிற்-கான அடிப்படைக் கட்டு-மானங்களின் மூலம் வருமானம் ஈட்டுகிறது. சில இந்தியர்கள் குடியுரிமைப் பெற்று நிரந்தரமாக இந் நாட்டில் தங்கி உள்ளனர். தேன்னிந்தியர்கள் முக்கி-யமான வியபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். 43- இந்திய சமூகப்பண்பாட்டு அமைப்புகள் இயங்கு-கின்றன. 5-இந்தியப் பள்ளிகள் உள்ளன. இந்திய அமைப்புகளுக்-கான கூட்டமைப்புக் குழு-என்கிற அமைப்பின் கீழ் இவ்வமைப்புகள் இயங்குகின்றன. இஸ்லாம் அல்லாதவர்களின் மத வழிப்பாட்டுத் தலங்களை அனுமதித்து இருப்பதால் இந்தியர்களால் 5-கிறித்துவ ஆலயங்களும், ஒரு இந்துக் கோவிலும், 3-குருத்துவாராக்களும் கட்டப்பட்டுள்ளன. 22 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில் 2,94,000 இந்தியர்கள் இருக்கிறார்கள். இது குவைத்தின் மக்கள் தொகையில் 13-சதவீதம் ஆகும். குவைத்துதான் மதன்முதலாக இந்தியர்களை வரவழைத்து பணிபுரிவதற்கான முன்மாதிரியை அமைத்துக் கொடுத்த நாடு. இங்கு 100-க்கும் மேற்பட்ட இந்திய பண்பாட்டுக் அமைப்பகள் உள்ளன. மொழி, வட்டாரம், தொழில் மற்றம் நிகழ்வுகள் அடிப்படையில் இக்கழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலிருந்து பிரபலமானவர்களை வரவழைத்தும் அல்லது குவைத் வாழும் இந்தியர்களினைக் கொண்டும் பல பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களை நடத்தவென இந்தியக் கலை வட்டம் என்கிற அமைப்பினா 1,200 பேர் அமர்ந்துக் காணக்கூடிய ஒரு அரங்கை நிர்மாணித்துள்ளனர்;. 9-இந்தியப்பள்ளிகள் இந்திய அரசு அனுமதியுடன் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றது.எட்டுத்தலைமுறைகளுக்கு மேலாக சில இந்தியக் குடும்பங்களைக் கொண்ட ஒமானின் மக்கள்தொகை 23 லட்சமாகும்। இங்கு உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 3,11,000. இது இந்நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 14-சதவீதம் ஆகும். 7-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியர்-களுடன் இந் நாட்டிற்கு தொடர்பு இருப்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.. அரபுநாடுகளில் வெளிநாட்டி-னருக்கு குடியுரிமை வழுங்கும் ஒரே நாடு இதுதான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியுரிமைப்பெற்ற இந்தியர்கள் இங்கு வசிக்-கிறார்கள். தினசரி பூஜை நடத்தக்கூடிய இரண்டு இந்துக் கோவில்கள் தலைநகர் மஸ்கட்டில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு கோவில் நூறு ஆண்டுகள் பழமைக் கொண்டது. 2 குருத்வாராக்கள் 7 கிறித்துவ ஆலயங்கள் உள்ளன. 2,000-த்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவர்கள் இந்நாட்டில் பணிபுரிகிறார்கள். 14-இந்தியப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 25-தனித்தனியான இந்தியப் பண்பாட்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன. இக்குழுக்கள் எல்லாம் ஓமனின் சட்டப்படி 'இந்தியன் சோஷியல் கிளப்' என்கிற ஒரு அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5,25,000 மக்கள்தொகை-யைக் கொண்ட கத்தரில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 1,30,000 ஆகும். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 24 சதவீதம் ஆகும். 1,200 கோடி ரூபாய் வருடாந்திர அந்நிய செலாவனியைத் தரும் இந்நாடு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இந்திய மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில்துறை வல்லநர்களை கொன்டுள்-ளது. 5-இந்தியப்பள்ளிகள் உள்ளன. இந்திய தூத-ரகத்தால் அனுமதிக்கப்பட்ட 50-இந்திய சமூக-பண்பாட்டு அமைப்புகள் உள்ளன. இவை இந்திய பண்பாட்டு விழாக்களை முன்நின்று நடத்துகின்ற அமைப்புகளாகும்.அமீரகம் என்று தமிழில் அழைக்கப்படும் 1971-ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளான துபாய், அபுதாபி, ஸார்ஜா உள்ளிட்ட நாடுகள் 19-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன் இருவழி உறவு கொண்ட ஒரு நாடாகும்। மோத்த மக்கள் தொகை 29 லட்சம் ஆகும். 9 லட்சம் இந்தியர்கள் இந்நாட்டில் உள்ளனர். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 30-சதவீதம் ஆகும். இதுவே வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் சதவீதம் ஆகும். சுற்றலாவிற்கான மையமாக இந்நாடு குவிமையப்படத்தப்படுவதால் எண்ணற்ற கண்ணைக்கவரும் கட்டிடங்களையும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் கொண்டுள்ளது. அழுகுபடத்தப்பட்ட கடற்கரையும், கடல்நடுவில் கட்டப்பட்ட நட்சத்திர ஓட்டல்களும் உலக மக்களைக் கவரும் ஒரு முக்கியமான மையமாக உள்ளது. 30 இந்தியப்பள்ளிகள் உள்ளன. கோவில்கள், குருத்வாராக்கள், கிறித்துவ ஆலயங்கள் உள்ளன. பல பண்பாட்டு அமைப்புகள் செயல்பட்டு வருவதுடன் அவை நிறைய பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.துபாய், ஓமன், கத்;தர், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளின் தமிழ் சங்கங்களின் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் நிகழ்வுகளை பிரபலப்படுத்தி தொடர்ந்து செய்து வருகின்றன। தமிழகத்திலிருந்து நடிகர்கள், பிரபலமானவர்களைக் கொண்டு இவை நடத்தப்படகின்றன. ஆணால், சவுதியின் நிலமை வேறு. அந்நாடுகளைப்போல பிரபலமாக எதுவம் இங்கு நடத்தப்படுவதில்லை.. பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஒப்பிட்டால் பிற நாடுகளைவிட சவுதியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். சவுதி தமிழர்களின் வாழ்வை பங்கிட்டுக் கொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டிகளும், திருட்டு வி.சி.டி-களும், செயற்கைக்கோள் ஆண்டனாக்களும், செல் போன்களும்தான். இந்தியப்பள்ளிகள் வழியாக சில பண்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 2006-ல் சவுதியில் இந்தியர்கள் ஆரம்பித்திருக்கும் மற்றொரு லாபகரமான வியபாரம் இந்தியாவைப்போல தனியார் பள்ளிகள். எண்ணற்ற தனியார் பள்ளிகள் இந்திய குழுந்தைகளக்காக நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகள் சில ஒன்றுகூடல்கள் மற்றும் கலை நிகழ்வுகளை நடத்திவருகின்றன.இதைத்தவிர நிறைய அமைப்புகள் மொழிரீதியாக, வட்டாரரீதியாக, தொழில்ரீதியாக பொதுவானவர்களைக்கொண்டு அமைந்துள்ளன। இவைகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஈடுபடுவதாகவோ அல்லது தங்களது அமைப்பின் எல்லைக்குள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கானதாகவும் உள்ளன. சில நேரங்களில் இந்தியாவில் நடைபெறும் நிகழ்வகளின் எதிர்விளைவாக சில அமைப்புகள் உருவாக்கப் படுவதுண்டு. உதாரணமாக சுணாமியன்போது சிலநபர்கள் ஒன்றகூடி அமைப்பாக செயல்பட்டு தமிழ் மக்களுக்கு உதவிகளை வசூலித்து அனுப்பியதைக் கூறலாம். இன்றைய வளைகுடா நாடுகள் ஒரு பான்-அரேபிய பண்பாட்டை கொண்டதாக அமைந்துள்ளன. இந்நாடுகள் இஸ்லாமிய மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. இதுவே இந்நாடுகளின் வாழ்தளத்தை தீர்மாணிக்கும் காரணியாக அமைகிறது. வேறுபட்ட பண்பாடுகளையும், வரலாற்றுச் சூழலையும், அரசியல் அமைப்பையும் கொண்ட இந்நாடுகள் பெட்ரோல் மற்றும் இஸ்லாமால் ஒருபடித்தான பண்பாட்டு அமைப்பு போன்ற தோற்றத்தை தருவதாக உள்ளது. 7-ஆம்-நூற்றாண்டில் அரேபியாவில் உருவான இஸ்லாமிய பேரரசு இன்றைய வளைகுடா நாடுகளை உள்ளடக்கி வளர்ந்தது. கிழக்கில் சீனா மற்றும் இந்திய எல்லைகள் முதல் வடக்கில் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கில் ஸ்பெயின் வரை நீண்டுகிடந்த ஒரு பேரரசு. இது அரேபிய பண்பாட்டையும் பிற நாடுகளின் பண்பாட்டையும் கலந்த ஒரு கலப்பு பண்பாட்டை உருவாக்கியது. இக் காலத்தில் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க மற்றும் லத்தின் தத்துவ, விஞ்ஞானம் பற்றிய பல பிரதிகள் ஸ்பெயின் நாடு வழியாக ஐரொப்பியாவிற்கு சென்றது. இப்பிரதிகள் கிரேக்க லத்தின் தத்துவம் பற்றிய அறிமுகங்களை உலகிற்கு வழங்கின. ஒருவகையில், இன்றைய ஐரொப்பிய பண்பாடும் அதன் அடிப்படை சிந்தனைகளான கிரேக்க மற்றும் லத்தின் தத்துவார்த்த உலகப்பார்வைகளும் அரேபிய சமூகங்களின் வழியாகவே சென்றடைந்தன எனலாம். ஸ்பெயின் ஐரொப்பிய அரேபிய பண்பாட்டு கலப்பிற்கான மையமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக வளைகுடா நாடுகளின் வாழ்தளம் மற்றும் வாழ்க்கைச் சூழல் என்பது ஒருபடித்தானது அல்ல। இது பாரிய வேறுபாட்டை இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டினரின் குறிப்பாக இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் வாழ்க்கசை;சூழலில் ஏற்படுத்துவதுடன் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்களது தாய்நாடுகளின் வாழிடத்திலும், அவர்களது மன அமைப்புகளிலும் உருவாக்குகிறது. இன்னும் குறிப்பாக அவர்களது மன அமைப்பை வார்ப்பதில் இது பெரும் பங்கைச் செலுத்துகிறது.ஐரொப்பிய நாடுகளைப்போல இந்நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை। ஓமனில் குடியுரிமை அனுமதித்த போதிலும், அந்நாட்டில் 20-ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் மற்றும் அந்நாட்டைச் செர்ந்த பெண்ணை மணந்திருக்க வேண்டும். குறிப்பாக மற்ற அரபுநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே அது சாத்தியம் என்பதால் இந்தியர்கள் இந்நாடுகளை ஒரு பணம் சம்பாதிக்கும் தற்காலிக குடியிருப்புகளாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் தங்களது; உழைப்பை விற்று ஊதியத்தை முற்றிலுமாக தனது தாய்நாட்டில் சேமிக்கும் ஒரு மனோநிலையே இவர்களிடம் அமைந்துள்ளது. இச்சேமிப்பு மனோபாவம், வாழ்வை ஓரு குறிப்பிட்ட தி;ட்ட அமைப்பிற்குள் வாழ நிர்பந்திக்கிறது. அல்லது தனது இச்சைகளை, ஆசைகளை, வேட்கைகைளை கட்டுப்படுத்தவும், அதனை தள்ளிப்போட்டு அந்த இச்சைகளை தனது தாய்நாட்டில் வாழ்ந்து கொள்ளலாம் என்பதாக வாழ்க்கைக் காலத்தை சம்பாரித்து சேமிப்பதற்க்கானதாகவும், செலவழித்து அனுபவிப்பதற்கானதாகவும் ஆன இரண்டு காலங்களாக பிரித்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. இந்நிர்பந்தம் மனதை ஓரு பிளவுபட்ட நிலையில் கட்டமைக்கிறது. இப்பிளவு இருவெறுபட்ட சமூக அடையாளங்களுக்குள் இயங்குவதாக அமைகிறது. ஒரு சமூகம் வேட்கைகளை நிறைவு செய்வதற்கானதாகவும், பிறிதொரு சமூகம் வேட்கைகளை ஒடுக்குவதாகவும் அல்லது தள்ளிப்போடுவதாகவும் உள்ளது. பிற நாடுகளில் ஓரளவு இறுக்கமற்ற சூழல் நிலவினாலும், குறிப்பாக சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மற்றும் தமிழருக்கு இது பொறுந்தும். இவர்கள் தாய்நாட்டைப்பொறுத்தவரை ஒரு எதிர்புரட்சிகர பிற்போக்கு சக்திகளாக மாறுவதற்கு இம்மனநிலையே ஒரு காரணமாக அமைகிறது.மதஅடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இச்சமூகங்களில், இயங்கும் இந்திய உடல்களும் மத அடையாளங்களை உவந்து பெற்றுக்கொள்ளும் ஒரு இயங்கியலை புரிந்துகொள்வது அவசியம்। இங்கு பெறும் மத அடையாளம் இந்திய அரசியலில் ஓரு குறிப்பிடத்தக்க பாதிப்பை உருவாக்குவதாக உள்ளது. குறிப்பாக இந்திய மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு பொருளாதாரரீதியாக உதவக் கூடியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தங்களது பண்பாட்டு, மொழி, தேச அடையாளத்தை நிரூபித்துக் கொள்ள இந்திய அரசியலின் பிற்போக்கு சக்திகளை வளர்க்கும் பணியைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் தங்களது அடையாள நெருக்கடியை தீர்த்துக்கொள்ள தனது தாய்நாட்டின்மீது அதீத பற்றைக் கொண்டவர்களாகவும், தாய்நாட்டின் மீது ஒரு விமர்சனமற்ற பார்வையும், அதன் எல்லா பிற்போக்குத்தனங்களையும் ஆதரிக்கும் நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக, தாய்நாட்டு ஏக்கம் தேசப்பற்றாக பரிணமிக்கிறது. இதன் மற்றொரு விளைவாக இவர்களது மதப்பற்றும் அதிகரிக்கிறது. ஊரில் கோவிலுக்கோ அல்லது பள்ளிவாசலுக்கோ செல்லாதவர்கள்கூட இங்கே தனது இறைவழிப்பாட்டை தீவிரப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். இந்தியர்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சனை வளைகுடா நாடுகள் சொந்த நாட்டு மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை பயிற்றுவித்து வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கமுயல்வதாகும்। சில நாடுகள் அரசுசார் நிறுவனங்களில் சொந்த நாட்டினரை 100 சதவீதம் பணிக்கு அமர்த்தியிருப்பதுடன், எல்லா தனியார் நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சொந்த நாட்டினரை பணிக்கு வைப்பதை கட்டாயமாக்கி உள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்துவராத நிலையில் பணியடங்களை உள்நாட்டினரைக்கொண்டு நிரப்புவதும், ஓரு தனிப்பட்ட நாட்டினரை அதிகமாக நிரப்பாமல் பல்வேறு நாட்டினரைக்கொண்டு நிரப்புவதும், குறிப்பிட்ட நாட்டினரின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் இது நம்மை பாதிக்கும் என்றாலும், இதன்மூலமே அந்நாடுகளும் சுயமாக தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்பதுதான் முக்கியம். இதன் தொடர்ச்சியாக இந்நாடுகள் தங்களை ஒர் அரேபிய தேசியமாக வளர்த்துக் கொண்டு, நாடுகளாக உள்ள இவை தேசங்களாக மாறும்போது, அது உலக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் செலுத்துவதாக இருக்கும். அமீரகமயமாக்குதல், சவுதிமயமாதல் என்கிற செயல்பாட்டிற்கான துவக்கம் 2015-ற்குள் முற்றுப்பெருவதற்கான முயற்சிகளில் அமீரகம் மற்றும் சவுதி அரேபியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலை ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காண்பது போல 2020-ல் இந்திய வல்லரசு நாடாக மாறுவதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக வளைகுடாவிலிருந்து திரும்பும் இந்தியார்களால், நெருக்கடியைச் சந்திக்குமா? அல்லது வேறு வழிகளில் அதனை சமாளிக்குமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.-ஜமாலன்01-01-௨00௭
குறிப்பு: இககட்டுரை தமிழ்கொடி என்கிற மலருக்காக எழுதப்பட்டது. உலகின் தமிழர்கள் வாழும் நாடுகளினைப்பற்றிய ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்ட மலர் அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக